Friday, March 13, 2009
சிந்தித்து செயல்படுங்கள்!
ஒரு ஊரில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்நாளில் ஒரு பொய் கூட சொன்னதில்லை. எப்போதும் உண்மையை மட்டுமே பேசிய அவரை எப்படியும் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று ஒரு சிறுவன் முடிவு செய்தான். அதன்படி ஒரு நாள் ஒரு சிறிய பறவையை அந்த சிறுவன் தன் கைகளில் மறைத்துக் கொண்டு அந்த முதியவரிடம் வந்தான்.
அந்த சிறுவன் அந்த முதியவரைப் பார்த்து தான் மறைத்து வைத்திருக்கின்ற கைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் ஏதாவது பூச்சியோ, புழுவோ அல்லது பறவையோ இருக்கலாம் என்றார். முதல் கேள்வியை சரியாக சொன்ன முதியவரிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்டான் அந்த சிறுவன். தன் கையிலிருந்த பறவை உயிரோடு இருக்கிறதா அல்லது இறந்து கிடக்கிறதா என்று கேட்டான். அந்த முதியவர் பறவை உயிரோடு இருக்கிறது என்றால் அதனைத் தன் கைகளாலேயே அழுத்திக் கொன்று விடலாம். இறந்து கிடக்கிறது என்று சொன்னால் பறவையைப் பறக்க விடச் செய்து விடலாம் என்று நினைத்தான். இந்த கேள்விக்கு முதியவர் எப்படியும் பொய் சொல்லி விடுவார் என்று நினைத்தான்.
ஆனால் அதற்கு அந்த முதியவர் என்ன சொன்னார் தெரியுமா?. சற்றே சிந்தியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் கீழே செல்லுங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதற்கு அந்த முதியவர் அந்த சிறுவனைப் பார்த்து "தம்பி அந்த பறவை உயிருடன் இருப்பதும் இறந்து போவதும் உன்னுடைய கைகளில் இருக்கிறதப்பா" Its all in your hand என்று சொன்னார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். அதனை கேட்டு அந்த சிறுவன் அந்த முதியவரின் அறிவுக் கூர்மையை எண்ணி தலை குனிந்தான்.
பின் குறிப்பு:
ஒரு செயலைத் தொடங்கும் முன்பு நன்கு யோசித்து தொடங்குங்கள். அதே மாதிரி ஒன்றைப் பேசும் முன்பு மிகச் சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாது. நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment