Monday, December 21, 2009

அவதார்- திரைவிமர்சனம்


நேற்று தேவி தியேட்டரில் "அவதார்" திரைப்படம் பார்த்தேன். நான் அவ்வளவாக ஆங்கில படம் பார்ப்பதில்லை. பார்க்க விருப்பமுமில்லை. நண்பர்கள் இன்டர்நெட்டில் புக் செய்துவிட்டதால் வேறு வழியில்லாமல் செல்ல நேரிட்டது. ஆனால் படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு கிடைத்த திருப்தி..அப்பப்பா..அதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. படத்தை பார்த்தால்தான் அதை உணரமுடியும். சரி கதைக்கு வருவோம்.

வேற்று கிரகத்தில் இருக்கும் விலைமதிக்க முடியாத மினரல்களைக் கவர்ந்துபோக அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிட திட்டமிடுகிறது. அதற்கு அந்த கிரகத்தில் இருக்கும் மக்களைக் கொன்றாக வேண்டும். அதற்காக அந்த மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள நம்ம ஹீரோ (சாம் வொர்திங்டன்) தேர்ந்தெடுக்கபடுகிறார்.

வேற்று கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் உருவத்தில் மிகவும் வித்தியாசமானவர்கள். சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் மிகவும் உயரமாக, பெரிய காதுகளோடு, பின்னால் வாலோடு இருப்பவர்கள். அதனால் அவர்களோடு சேர்ந்து பழக நமது ஹீரோவின் ஒரு ஜீனை எடுத்து க்ளோனிங் செய்து, அந்த க்ளோனிங் ஹீரோவை அனுப்புகிறார்கள்.

நம்முடைய ஹீரோ அந்த கிரகத்தில் இருக்கும் பண்டோரா என்னும் அடர்ந்த காட்டிற்குள் நுழைகிறார். அந்த காடு பல விசித்திரங்களை தன்னுள்ளே கொண்டது. தொங்கும் மலைகளும், விசித்திரமான விலங்குகளும், கலர்கலர் பூச்சிகளும் நிறைந்த அழகிய காடு. சாதாரண மக்களால் அந்த காட்டில் சுவாசிக்க முடியாது. அந்த காட்டில் நுழையும் நம் ஹீரோவை அந்த கிரகத்தில் வாழும் ஒருத்தி (அதான்...நம்ம ஹீரோயின்) காப்பாற்றி, அந்த கிரகத்தில் உயிர் பிழைத்திருக்க வேண்டிய விஷயங்களைக் கற்று கொடுக்கிறாள். இரண்டு பெரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். நம் ஹீரோ அந்த மக்களோடு அன்பாக பழகுகிறான். தான் வந்த நோக்கம் அழிந்து அந்த மிக அழகிய கிரகத்தையும், அதில் வாழும் மக்களையும் காப்பாற்ற முயல்கிறான்.அவனுக்கு உதவியாக மேலும் நான்கு பேர் வருகிறார்கள்.இதனிடையே அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிடுகின்றன. அமெரிக்க படைக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் இடையே பயங்கர சண்டை மூள்கிறது. இறுதியில் யார் வென்றார்கள் என்பது கிளைமாக்ஸ்.

ஜேம்ஸ் கேமரூனின் மிக பிரம்மாண்ட படைப்பு "அவதார்". சுமார் 500 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பிரம்மாண்டம். படத்தின் ஒளிப்பதிவு படத்தைப் பல மடங்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம். கதை, நாம் ஏற்கனவே பல தமிழ் படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், அதை எடுத்த விதம் சூப்பர். டெக்னிகலாக மிரட்டியிருக்கிறார்கள்.


தேவி தியேட்டரில் படத்தை 2D -யில் காண்பித்தார்கள். மறுபடியும் நாளை மறுநாள் சத்யம் தியேட்டரில் 3D -யில் பார்க்க நண்பர்களிடம் சொல்லியாகி விட்டது. கண்டிப்பாக அனைவரும் "திரையரங்கம்" மட்டுமே சென்று பார்க்க கூடிய திரைப்படம் "அவதார்".

அவதார்- பிரம்மாண்டத்தின் பிறப்பிடம்.

பின்குறிப்பு:

இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் "வேட்டைக்காரன்" படத்தை பார்க்கலாமென்று இருந்தேன். ஆனால் "அவதார்" படத்தைப் பார்த்தவுடன் அந்த முடிவை மாற்றி கொண்டேன்.

Wednesday, August 5, 2009

களவாடிய பொழுதுகள்














கடற்கரை மணல்திட்டுகளில்
காலில் மணலூற-நாம்
களவாடிய பொழுதுகள்
கருகிப் போனதடி
என் கண்ணே!

மடிமீது தலைவைத்து
மனதை வான்வைத்து-அழகு
மயில்போல மறைந்த
மாலை பொழுதுகள்
மீண்டும் திரும்புமோ
என் கண்ணே!

கன்னம் திருப்பினாய்
செவ்விதழில் முத்தமிட்டேன்
பொய்யாய் அடித்தாய்-சிறு
பொய்யாகவேனும் புலருமோ
அந்த பொழுதுகள்
என் கண்ணே!

இரவைச் சுட்டெரித்த
சூரியன் போல- நம்
பிரிவை சுட்டெரிக்க
நினைவுகள் ஒன்றே போதும்
என் கண்ணே!

Tuesday, August 4, 2009

திரைப்பட ரசிகர்களின் வன்மம்..


சமீபத்திய சில படங்களின் வெற்றி என்னை பாதித்திருக்கிறது. குறிப்பாக சுப்ரமணியபுரம் மற்றும் நாடோடிகள். தமிழ் திரைப்பட ரசிகர்கள் இத்தகைய படங்களுக்கு கொடுக்கும் ஆதரவைப் பார்க்கும்போது எங்கே அவர்களின் உள்ளங்களிலும் அத்தகைய வன்மம் இருக்குமோ என்ற பயம் எழுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனர் சசிகுமார் ஒருவனுடைய தலையை ஆடு அறுப்பது போல் அறுக்கும் காட்சிக்கு ரசிகர்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தபோது அப்படிதான் எனக்கு தோன்றியது. அதே மாதிரி நாடோடிகள் படத்தில் இரண்டு காதலர்கள் சில காரணங்களால் பிரிந்து விடுகின்றனர். அவர்களை சேர்த்துவைத்த நண்பர்கள் அவர்களை கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்வதையும் வெகுவாக ரசித்தனர் ரசிகர்கள்.

படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது சில விஷயங்கள் நன்றாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அதை சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது அதனுள் இருக்கும் வக்கிரம் புரிய வரும். திரைப்படங்கள் மக்களை எளிதாய் சென்றடையக் கூடிய ஒரு மீடியா. அதில் நல்லதும் இருக்கும். தீயதும் இருக்கும். மக்களாகிய நாம்தான் எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிய வேண்டும். மக்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்ல வேண்டியது இயக்குனர்களின் கடமை. மக்கள் மனதில் வன்மங்களை வளர்க்க அவர்கள் காரணமாக இருக்க கூடாது. இயக்குனர்களின் படைப்புரிமையில் தலையிட நான் இங்கே வரவில்லை. மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.


காதல் செய்யும் காதலர்கள் பிரிவது என்பது நம் நாட்டில் தினமும் நடக்கின்ற ஒரு கேவலமான விஷயமாக மாறிவிட்டது. அதற்காக தாங்கள் சேர்த்து வைத்தோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை கடத்தி துன்புறுத்துவது என்பது முட்டாள்தனமான செயல். அதை ரசிகர்கள் ஏற்றுகொள்கிறபோது மனதில் ஒருவித நெருடல். இனிவரும் படங்களிலாவது மக்கள் இத்தகைய காட்சிகளை ரசிக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இயக்குனர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.

Sunday, July 26, 2009

அழகிய திருமுகம்

















தெருவோரம்
நடந்து செல்கையில்
தெய்வத்தினும் அழகிய
திருமுகத்தைப் பார்த்தேன்

சிரித்த தெனைப்பார்த்து
சிரித்தேன் அதைப்பார்த்து
கண்ணடித்த தெனைப்பார்த்து
கண்ணடித்தேன் அதைப்பார்த்து
கைநீட்டி அழைத்தது
கையருகில் சென்றேன்

இருகைகளையும் உயர்த்தியது-தூக்கி
மார்போடு இருத்திக் கொண்டேன்
முத்தமிட்டது கன்னத்தில்
முத்தமிட்டேன் அதன் கன்னத்தில்

நேரமாகிவிட்டது எனக்கு
செல்லவேண்டும் ஓரிடம்
இறக்கி விடைகொடுத்தேன்
பிரிய மனமில்லாமல்

தெருகடந்து செல்லும்வரை
திரும்பி நடந்தேன்
தெய்வத்தினும் அழகிய-அந்த
திருமுகத்தைப் பார்த்தபடி....

Thursday, July 23, 2009

அவள் அன்று விடுமுறை

















மனம் மயக்கும்
மாலை வேளையில்
மனம் அலைபாய்ந்தது
அவளை எண்ணி...

அலுவலகத்தில் நாளை
அவளிடம் பேச வேண்டும்-என
ஆவல் கொள்ளும்
என் மனம்...

மனதின் ஆற்றல்
மகாவல்லமை-என
மறுநாள் உணர்த்தியது
அவள் அன்று விடுமுறை.....

Thursday, July 9, 2009

புதிய தேடல்.....


நேற்று சைதை ராஜ் தியேட்டரில் 'பசங்க' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மிக குறைவான அளவே எடுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. சிறுவர்களுக்கான ஹாலிவுட் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சிறுவர்களுக்கான படம் எத்தனை வருகின்றது என்று பார்த்தால் மிக அதிகமாக இரண்டு அல்லது மூன்று படங்கள்தான் இருக்கும். இத்தகைய நிலை மாற வேண்டும். சிறுவர்களுக்கான படங்கள் நிறைய வெளி வர வேண்டும். அது தமிழ் சினிமாவிற்கு நல்லது.

சிறுவர்களுக்கான படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதால் வசூலும் கூடும். அது சிறுவர்களுக்கான நல்ல பாடமாகவும் இருக்கும். 'பசங்க' படம் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இயக்குனர் அழகாக, சுவாரஸ்யமாக சொல்கிறார். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத போது அவர்களுடைய உள்ளம் உடைந்து போகிறது. அது கொடுமையான விஷயம்.


குழந்தைகள் செய்யும் செயல்களுக்கு பாராட்டு கிடைத்து விட்டால் அது அவர்களை உற்சாகப்படுத்தும். அது அவர்களை மேதைகளாய் உருவாக்க வழிவகுக்கும். சிறுவர்கள் செய்யும் எந்த செயலையும் அலட்சிய படுத்தாதீர்கள். உங்களின் லட்சியங்களை அவர்களின் மேல திணிக்காதீர்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அன்பு ஒன்றுதான் சிறுவர்கள் எதிர்பார்க்கும் மருந்து. அந்த மருந்தை அவர்களுக்கு முடிந்த மட்டும் ஊட்டுங்கள்.

பெற்றோர்கள் தங்களுக்குள் இருக்கும் சண்டையை குழந்தைகளின் முன்னால் வெளிப்படுத்தாதீர்கள். அது அவர்களை மனரீதியாய் பாதிக்கும். நாமும் பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். அதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவேனும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அவர்களிடம் தினமும் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இன்றைய சூழ்நிலையில் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வருவதற்குள் இரவு நேரமாகிவிடுகிறது. பிள்ளைகள் அவர்களிடம் பேச வந்தால் தனக்கு அசதியாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிறிது சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுகின்றனர். பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் சகவாசம் எப்படி என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதில்லை.


இப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி உயர்ந்தவர்களாய் உருவாவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிள்ளைகள் தாத்தா பாட்டிகளிடம் நல்ல கதை கேட்டு வளர்ந்தனர். எனக்கு என்னுடைய அம்மா நல்லதங்காள் புராணத்தையும், என்னுடைய அப்பா ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை சொல்லி வளர்த்ததும் இன்றும் பசுமையான நினைவுகளாய் இருக்கின்றன. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக அவையெல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க பெறுவதில்லை. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை கூறுகின்றனர். இன்றைய சிறுவர்களே நாளைய இளைஞர்கள். இந்தியா வல்லரசாக ஆவது அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். அது அந்த சிறுவர்களின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் மேல் அன்பு செலுத்தி அவர்களை வருங்கால வல்லரசு இந்தியாவின் தூண்களாய் உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்....

Tuesday, July 7, 2009

கடவுள்!


கடவுள் இல்லையென்று
யார் சொன்னது?
உன்னைப் படைத்த தாயின்
பெயர் என்ன?

- வெங்கடேசன்

Monday, July 6, 2009

இன்பம் துன்பமற்ற வாழ்க்கை!


மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே நம் மரணத்தின் கடைசி நொடி வரை நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வருந்துவதும் மனித இயல்பு. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான மனிதர்களை துன்பங்களே ஆட்டுவிக்கின்றன. நமக்கு வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்குமே நாம்தாம் காரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்படியிருந்தும் நாம் துன்பத்தின் வாயிலில் சென்று சிக்கிக் கொள்கிறோம். அதற்கு காரணம்தான் என்ன? ஒரு சிறிய அலசல்.

ஒரு வேலையை நாம் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலையை பற்றின்றி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அந்த வேலையின் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். பற்றின்றி செய்ய வேண்டும் என்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. எடுத்த வேலையை ஏனோ தானோ என்று செய்வதற்கு பற்றின்றி வேலை செய்தல் என்பது பொருள் இல்லை. ஒரு செயலை எந்த பற்றும் இல்லாமல், அதாவது அந்த வேலைக்கு அடிமையாகாமல், அதன் பந்தத்திற்கு உள்ளாகாமல், அதன் முடிவு பற்றிய பயம் இல்லாமல், முழு மூச்சோடு அந்த வேலையை செய்ய வேண்டும். அப்போது அந்த வேலையை நாம் நன்றாக செய்ய முடியும். அந்த செயலின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும் நாம் அதனால் மகிழ்ச்சி கொள்ள மாட்டோம். முடிவு பாதகமாக இருந்தாலும் அதனால் நாம் வருத்தம் கொள்ளவும் மாட்டோம். காரணம் நாம் பற்றின்றி வேலை செய்கிறோம்.

எந்த ஒரு வேலையையும் என் உடம்பு செய்வதில்லை. நான் என்ற என் ஆன்மா இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணத்துடன் ஒரு செயலை செய்ய செய்ய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்மை இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நம்மை நெருங்குவதில்லை. காரணம் நாம் அந்த செயலை ஆன்மாவால் செய்கிறோம். ஆன்மா இன்பம் துன்பம் ஆகிய எதுவுமே அறியாதது. ஆன்மா நிலையானது, அழிவற்றது. இந்த உடம்பு நிலையற்றது. கண்டிப்பாக ஒருநாள் அழியக் கூடியது. உடம்பு அழியும்போது ஆன்மா வேறொரு உடலைத் தேடி செல்கிறது.

இப்படி ஒரு செயலைப் பற்றில்லாமல் செய்ய முயற்சிப்போம். பிறகு நம்மை இன்பம் துன்பம் எதுவுமே கட்டுப்படுத்தாது. எந்த ஒரு மனிதன் இன்பம் துன்பம் ஆகிய நிலைகள் இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருக்கின்றானோ, அந்த மனிதன் ஒரு செயலை ஆன்மாவால் செய்கிறான் என்று அர்த்தம். அவன் முழு சுதந்திரம் உடையவனாக இருக்கின்றான் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

மேலே சொன்ன கருத்துக்கள் கீதையின் மையக் கருத்தாகும். அதனைக் கடைப்பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் கடைபிடித்தால் உங்களுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை. ஆன்மாவில் நிலைபெற்று விட்டீர்கள். அடுத்த பிறவியும் இல்லை. காரணம் உங்களுக்கு ஆசைகள் இருப்பதில்லை. ஆசை இருக்கும் வரை உங்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் ஆசையில்லாமல், பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்படுகிறது.

நான் ஏதோ கீதையை உபதேசிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். கீதையில் நான் படித்த எனக்கு பிடித்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மேலே கூறியவற்றை கடைபிடிக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். வாசித்தமைக்கு மிக்க நன்றி....

Thursday, July 2, 2009

கவிதைகள்

கடவுள்:















என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத
நீர் என்ன கடவுள்?

நன்றி - கவிஞர் நீலமணி

தண்டனை:













கண்களால்
நான் செய்யும் தவறுகளுக்கு
இதழ்களால் நீ
தண்டனை தருவதால்
திருந்துவதாக இல்லை நான்!

நன்றி - கவிஞர் செல்வமுத்துக்குமரன்

Wednesday, June 24, 2009

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்


குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா

நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை
அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா

வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணைத் தொட றெக்கை கொடு குயிலே..
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே..

ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது

குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்..

Tuesday, June 23, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதை அப்போதே பிரசுரமாயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. பாப்புலர் மீடியாக்களில் வெளிவரட்டும் என்றுதான் நானும் இதை பதிவிடாமல் காத்திருந்தேன். தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமை கண்டு கொதிக்கும் ஒவ்வொவரின் இதயமும் பேசுவதாகவே இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன். அறம் பாடினால் பாடப்பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்பதை நாடறியும். நானும் அறிவேன்.

‘உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன்’ என்று வசனம் பேசிவிட்டு தமிழன் தலையில் குண்டுவிழுவதை கண்டும் காணாமல் இருக்கும் திரைப்படத் துறையினருக்கு மத்தியில் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை உண்மையான தமிழர்கள் என்றென்றைக்கும் நினைத்துப்பார்க்க வேண்டியது அவசியம். சரி பீடிகை போதும் கவிதையை வாசியுங்கள்.
தாமரை: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!..........

பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

Wednesday, June 17, 2009

தோல்வி!


என் காதல்
முடியட்டும் தோல்வியில்
பிரிவு.........
என்னை அவள் மிக அருகாமையில்
அழைத்து செல்கிறது.

Tuesday, June 9, 2009

வாசகர்களுக்கு என் வணக்கங்கள்...


வணக்கத்திற்குரிய வாசகர்களே,

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் பதிவு எழுத தோன்றியது. என்னையும் ஒரு பதிவாளனாக கருதி என் பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் என் நன்றி. நான் ஒரு புத்தகம் எழுதும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் என்னால் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பதிவெழுத முடிவதில்லை. இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இனி பதிவு எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியிட்ட என் பதிவைப் (புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையா?) பார்த்து ஒரு வாசகர், அந்த பதிவு தன்னையும் எழுத தூண்டியதாக கூறியதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படி என்னுடைய எழுத்தும் ஒருவருக்கு உபயோகமாக இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். கண்டிப்பாக மிக அதிகமான நண்பர்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்று எண்ணுகிறேன். அதே போல அவர்களுக்கு கலையார்வமும் கண்டிப்பாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். காரணம், வலையில் பதிவு எழுத நேரம் ஒதுக்கும் உங்களால் கண்டிப்பாக அதன் அனுபவத்திலிருந்து ஒரு புத்தகம் எழுத முடியும் என்று எண்ணுகிறேன். அது உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் கருத்து.

ஆல் தி பெஸ்ட்....

Tuesday, April 28, 2009

கருணாநிதியின் உச்சகட்ட நாடகம் - வைகோ











இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று காலை சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

கருணாநிதியின் உச்சகட்ட நாடகம் - வைகோ:
முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம் என்றார். அவர் மேலும் கூறுகையில், கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். கடந்த இருண்டு நாட்களாக சிறிலங்கா இராணுவம் ரசாயண குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலமாக சிறிலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?. இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும். கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ. இதேவேளை, இன்று காலை சிறிலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை ஆறு மணி முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் மருத்தவர்கள் வந்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து தமது கவலையை வெளியிட்டனர். இந்நிலையில் 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் சிறீலங்கா அரசு போர் நிறுத்தம் எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன் கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் தாக்குதலை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 14, 2009

இளைஞர்களே இந்தியாவின் வளர்ச்சி உங்கள் கையில்!

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு. இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல. அதே மாதிரி அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அந்த பாரம்பரிய தொழிலை சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் என்பது என் கருத்து. அதற்காக சாப்ட்வேர் தொழில், அல்லது மற்ற துறைகளை ஒதுக்கி விடுங்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். அது மிகவும் தவறு. ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.

இன்று ஒரு விவசாயின் நிலைமை எப்படி இருக்கிறது?. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ஒரு விவசாயின் நிலைமைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் இதை சொல்கிறேன். நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் இப்போது பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் கணக்கில் எடுத்தால் ஒரு விவசாயின் நிலைமையை நன்கு உணரலாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு ஏக்கரில் வேர்க்கடலைப் பயிரிட்டோம். அது விளைந்து அந்த ஒரு ஏக்கரில் இருந்து இருபத்தைந்து மூட்டை பயிறு கிடைத்தது. ஒரு மூட்டைப் பயிறு 1500 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 25 மூட்டைப் பயிரின் விலை 37500 ரூபாய். ஆனால் இந்த வருடம் நாங்கள் மூன்று ஏக்கரில் வேர்க்கடலைப் பயிரிட்டு அதனால் கிடைத்த மகசூல் வெறும் 20 மூட்டைதான். ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறதே தவிர கொஞ்சம் கூட மகசூல் அதிகரிக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்க என்ன காரணம் என்று பார்த்தோமேயானால், பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் இருக்கிறது. காலங்காலமாக நாம் பயன்படுத்தி வந்த செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை அடியோடு மாற்றி விட்டன. இயற்கை உரங்களைப் போட்டு பயிர்களை வளர்க்கும் முறை இன்று விவசாயிகளிடம் இல்லை. மற்றொன்று அரசின் அலட்சியம். விவசாய வளர்ச்சிக்கு உண்மையான, தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டுவிட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன. இப்போது 60000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள். நல்ல விஷயம்தான். அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள். ஆனால் கடன் தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

இதற்கு அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டந்தோறும் வேளாண்மை பல்கலைக் கழகங்களை அமைத்து நல்ல வீரியமுள்ள விதைகளை உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த வகையான பயிர்களை இடலாம் என்று சொல்லி தரலாம். பிறகு முக்கியமாக இயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் முறை பற்றியும், விவசாய உரங்களை பயன்படுத்தி பயிர்களை விளைவிப்பதை பற்றியும், அதனால் மண்ணின் தன்மை எப்படி வளமையாகின்றன என்பதைப் பற்றியும் சொல்லி தரலாம். இதெல்லாம் அரசு மேற்கொள்ள வேண்டிய சில சீரியசான நடவடிக்கைகள். அதை விட்டுவிட்டு வெறும் கடனைத் தள்ளுபடி செய்வதால் மட்டுமே விவசாயிகள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். விவசாய வளர்ச்சிக்கும் அதனால் தொலைநோக்கு பயன் கிடைக்க போவதில்லை.


அடுத்தது விவசாய நிலத்தில் விளையும் பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணய செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும். ஒரு சோப்பு தயாரிக்கும் கம்பெனி எப்படி அந்த சோப்புக்கு அதுவே விலையை நிர்ணயம் செய்யுதோ அதே மாதிரி ஒரு விவசாயியும் அவன் விளைவித்த பயிர்களுக்கு அவனே விலை நிர்ணயம் நிலைமை வர வேண்டும். அரசே விவசாயிகள் விளைவித்த பயிரை நேரடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். இதெல்லாம் அரசு நினைத்தால் முடியாத காரியமல்ல. உடனடியாக அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை மனசாட்சியோடு எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயம் வளர்ச்சி பெரும்.

முடிவாக ஒன்று. ஒரு இன்ஜினியர் தந்தை தன் மகன் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறார். ஒரு டாக்டர் தந்தை தன் மகன் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஒரு பிசினஸ் மேன் தன் மகன் ஒரு பெரிய பிசினஸ் மேக்னட்டாக வரவேண்டும் என்று ஆசைபடுகிறார். எதுவும் தவறில்லை. ஆனால் ஒரு விவசாயி தந்தை தன் மகன் ஒரு பெரிய விவசாயியாக வரவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. அவனை ஊக்கப்படுத்துவதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு. பிறகு பிற்காலத்தில் யார் விவசாயம் செய்வார்கள். உணவிற்காக மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரவேண்டுமா?. என்று ஒரு விவசாயி தன் மகனும் ஒரு விவசாயியாக வரவேண்டும் என்று நினைக்கிறானோ அன்றுதான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி தொடங்கும். இளைஞர்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள். இப்போது வேறு வேலை பார்த்தாலும் பிற்காலத்தில் உங்களால் முடிந்த அளவு விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருங்கள். வணக்கம்.

Sunday, April 12, 2009

இந்த தேர்தலில் விஜயகாந்தின் பலம்














இந்த லோக்சபா தேர்தலில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசல் இது. கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இதில் யார் நிறைய தொகுதிகளை வென்று முதலிடம் பிடிக்க போகிறார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதில் இலங்கை பிரச்சினை யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் ஒரு விஷயமாக இருக்குமா?. திமுகவின் சாதனைகள் இந்த தேர்தலில் அதற்கு முதன்மை பெற்று தருமா?. இப்படி பல கேள்விகள் நமக்குள் இருக்கின்றன.

இருந்தாலும் இந்த தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்பது என் பலமான கருத்தாக உள்ளது. காரணம் அந்த அரசின் சாதனைகள். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் பலமான வரவேற்பை பெற்றுள்ளன. ஏழை விவசாயிகளின் ஏழாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி ஒரு நல்ல விஷயம். அதே மாதிரி மத்திய அரசு அறிவித்த 60000 கோடி ரூபாய் தள்ளுபடி இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதும் எனது கருத்தாக உள்ளது. இலவச கலர் டிவி திட்டம், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் திட்டம், ஒரு லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் என்று பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. இவையெல்லாம் இந்த திமுக அரசுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பது என் யூகம்.

ஆனால் இந்த தேர்தலில் திமுக அரசின் கூட்டணி கொஞ்சல் பலவீனமாகவே உள்ளது. போன தேர்தலில் 40/40 என்று ஜெயித்தவர்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக அந்த விகிதத்தில் ஜெயிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி அதிமுக இந்த தேர்தலில் பலமான கூட்டணியுடன் களமிறங்குகிறது. அது அதிமுக கட்சிக்கு ஒரு பழம். ஆனால் அதிமுக ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டுள்ளதா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்ல தோன்றும். ஆ ஊ என்றால் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவுக்குள் ஓடி மறைந்து கொள்கிறார். பாமகவுக்கு உள்ள மரியாதையை ராமதாசே கெடுத்துக் கொண்டார். வைகோவை பற்றி சொல்ல தேவையில்லை. ஒன்றுக்கும் ரெண்டுக்கும் ஜெயலலிதாவிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார். அவர் காட்சியில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நாஞ்சில் சம்பத்தும் சிறையில் இருக்கிறார்.

இதில் கேப்டன் விஜயகாந்த் என்ற ஒருவர் தான் தேறுகிறார். இந்த தேர்தலில் தனியாக களம் காண்பது அவருக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்துள்ளது. மற்ற கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இளைஞர்களின் ஒட்டு அந்த கட்சிக்கு நிறையவே உள்ளது. நான் கேட்ட நிறைய பேர் விஜயகாந்துக்கு ஒட்டு போடுவார்கள் என்றே சொன்னார்கள். அதை வைத்து பார்க்கும் போது இந்த தேர்தலில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக விளங்குவார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த தேர்தலில் கண்டிப்பாக 15 சதவீத ஓட்டுக்களை பெறுவார் என்று நம்புகிறேன். சரி இந்த தேர்தலில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என்று இங்கே கொடுத்துள்ளேன்.

திமுக - 23

அதிமுக - 13

தேமுதிக - 4

தேமுதிக இந்த தேர்தலில் நான் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு தொகுதிகளில் ஜெயித்தால் அவருக்கு அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இது லோக்சபா தேர்தல் என்றாலும் மாநில அரசின் சாதனைகள் திடமாக பிரதிபலிக்கும்.
சரி இலங்கைப் பிரச்சினைப் பற்றி பேசவே இல்லையே என்று கேட்கிறீர்களா?. ஆனால் அந்த பிரச்சினை இந்த தேர்தலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்காது. பெரும்பாலான மக்கள் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக நினைக்கவில்லை.

Wednesday, April 8, 2009

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால்!

எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. ஒரு விஷயத்தைப் பற்றி அலசாமலேயே வெறும் தலைப்பைக் கொடுத்துவிட்டு நம்முடைய பிளாக் நண்பர்களின் கருத்தை அறிய வேண்டும் என்று. என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று யோசித்த போது மனதில் உதித்ததுதான் மேலே சொன்ன தலைப்பு.

சரி விஷயத்திற்கு வருவோம். சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது இரண்டும் எதிரி நாடாக இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இரண்டு நாடுகளும் மறுபடியும் சேருவது என்பது நடக்கக் கூடிய காரியமா?. ஒருவேளை அப்படி இரு நாடுகளும் சேர்ந்தால் அது இந்தியாவுக்கு லாபமா அல்லது நஷ்டமா?. அல்லது பாகிஸ்தானுக்கு அது லாபமா இல்லை நஷ்டமா?. இதனால் இரு நாடுகளும் பயனடையுமா?. இதற்கெல்லாம் என்னிடம் தெளிவான பதில் இல்லை. அதனால் வாசகர்களாகிய நீங்கள் தான் என்னுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டும். ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Tuesday, April 7, 2009

வடகொரியா ஏவுகணை சோதனையும், இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்!

சில நாட்களுக்கு முன்பு வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பின. முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து. வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது சரியா? அல்லது தவறா? என்று பல பகுதிகளில் இருந்தும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதைப் பற்றி கீழே சற்று அலசுவோம்.
எந்த ஒரு நாடும் அதிநவீன போர் உபாயங்களை சோதனை செய்தால் அதற்கு முதலில் எங்கிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது என்று பார்த்தால் அது அமெரிக்காவில் இருந்துதான். காரணம் ராணுவத்தில் தான்தான் பெரிய ஆளாக (தாதா) இருக்க வேண்டும் என்ற மனோபாவம். வடகொரியா தற்போது சோதித்துள்ள ஏவுகணை 7600 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையாம். அதாவது அமெரிக்காவின் அலாஸ்கா நகரத்தைக் கூட இந்த ஏவுகணையால் தாக்க முடியுமாம். ஆனால் இந்த சோதனை சில வினாடிகளிலேயே தோல்வி அடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது. வடகொரியாவிற்கு நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தக்கூடிய திறன் இல்லை என்றும் அமெரிக்க கூறுகிறது. அவ்வாறு செலுத்துவது மிகவும் கடினமான காரியம் என்றும் இன்னும் பத்து வருடத்திற்கு வடகொரியாவால் அத்தகைய ஏவுகணையை வெற்றிகரமாக சோதிக்க முடியாது என்றும் அமெரிக்க கூறியுள்ளது. வடகொரியா ஏற்கனவே நிறைய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஆனால் நிறைய சோதனை தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருந்தாலும் அவற்றை ராணுவத்தில் சேர்த்துள்ளது. போர் சமயத்தில் அத்தகைய ஏவுகணையை செலுத்தினால் அது தவறாக வேறு பகுதியில் விழுந்து அது நிறைய மக்கள் மடிவதற்கு காரணமாக இருக்கும்.

சரி முக்கியமான விஷயத்திற்கு வருவோம். ஏன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் அமெரிக்காவிற்கு கோபம் வருகிறது. அமெரிக்கா மட்டும் மற்ற நாடுகளைத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்யலாம். அமெரிக்காவிடம் 10000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் பல உள்ளன. மற்ற நாடுகள் அணுகுண்டு சோதனை செய்தால் அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அமெரிக்கா தன்னிடம் மட்டும் 10000 - க்கும் அதிகமான அணுகுண்டுகளை வைத்துள்ளன. இதை அனைத்து நாடுகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக இந்தியா அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் இந்த பெரிய அண்ணன் கொள்கையை மற்ற மற்ற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதில் சீனாவின் கொள்கையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். எனக்குத் தெரிந்து அமெரிக்காவை தைரியமாக எதிர்க்கக் கூடிய நாடு எது என்றால் அது சீனாவாகத்தான் இருக்க முடியும். அந்த தைரியம் மற்ற நாடுகளுக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இந்த விஷயத்தில் சீனாவை முழுமையாக பின்பற்ற வேண்டும். அமெரிக்கா எது சொன்னாலும் தலையாட்டும் மனோபாவத்தை இந்தியா விடவேண்டும். இந்தியாவால் எந்த ஒரு விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக் கூடிய தைரியம் வரவேண்டும்.

வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது மிகச்சரியே. எந்த ஒரு நாட்டுக்கும் தன்னைக் காத்துக் கொள்ள கூடிய சக்தி இருக்க வேண்டும். அது அமெரிக்காவிடம் மட்டும் இருக்க வேண்டிய விஷயமல்ல. இதற்காக அமெரிக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டா செய்ய முடியும். வடிவேலு பாஷையில் சொன்னால் இது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. இறையாண்மையை எந்த ஒரு நாடும் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அந்த நாடு அழிவின் பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். இந்தியா இந்த விஷயத்தில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

Monday, April 6, 2009

அயன் - திரைவிமர்சனம்

இரண்டு நாட்களுக்கு முன்பே அயன் திரைப்படத்தை சென்னை சைதாபேட்டை ராஜ் தியேட்டரில் பார்த்து விட்டேன். ஆனால் இன்று தான் விமர்சனம் எழுத நேரம் கிடைத்தது. சரி கதைக்கு வருவோம்.

பிரபு கள்ளக்கடத்தல் செய்யும் ஆசாமி. சூர்யா அவரிடம் வேலை பார்க்கிறார். சூர்யாவின் அப்பாவும் பிரபுவிடம் வேலை பார்த்தவர்தான். அவரை எதிரிகள் கொன்று விடுகிறார்கள். அதனால் சூர்யாவும் பிரபுவிடம் வேலை பார்ப்பது அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. எங்கே தன் மகனுக்கும் தன் கணவனின் கதி வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். ஆனால் சூர்யா பிரபுவிடமே வேலை செய்கிறார். சூர்யா அழகாய் இருக்கிறார். அதேபோல் தமன்னாவும்.

காங்கோவில் சூர்யா வைரம் கடத்தும் போது அதை எதிரிகள் பறித்து விட்டு ஓடும் போது வரும் சண்டை காட்சிகளை மிக அருமையாய் எடுத்து இருக்கிறார்கள். அது ஏதோ ஒரு ஆங்கில படத்தில் வரும் சண்டை காட்சியாம். இருந்தாலும் அருமையாய் இருக்கிறது. வில்லனின் அடியாளாக வரும் விஜய் டிவி நண்டு சூர்யாவிடம் சேர்ந்து வில்லனுக்காக வேவு பார்க்கிறார். அவரது தங்கைதான் தமன்னா. ஆனால் அண்ணன் நண்டுவை மாமா ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறார்கள். தங்கையை ஐட்டம் என்று சொல்கிறார். அதனைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி நண்டு நன்றாக நடித்திருக்கிறார்.

வில்லன் தமிழ் சினிமாவிற்கு புதுசு. நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேறனும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வயிற்றில் வைத்து போதை மருந்து கடத்துவதும், அதனை வயிற்றைக் கிழித்து வெளியே எடுப்பதும் நெஞ்சைப் பிழியும் உண்மைகள். கள்ளக்கடத்தல் சூர்யாவை வைத்தே கள்ளக்கடத்தல்காரர்களை பிடிக்கும் வேலையை கட்சிதமாக செய்கிறார் பொன்வண்ணன். கடைசியில் சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் ஆபீஸில் வேலை போட்டுக் கொடுப்பது கமர்ஷியல் சினிமா.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. எம். எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. இயக்குனர் கே.வி. ஆனந்த் படத்தை ஜாலியாக இயற்றியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் ஜெட் வேகத்தில் போகும் என்று பார்த்தால் கொஞ்சம் ஆமை வேகத்தில் போகிறது. அதனைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். அவரின் முதல் படமான கனா கண்டேன் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படம் பின்பாதியில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். மற்றபடி சூர்யா பிரமாதபடுத்தியிருக்கிறார். சூர்யாவின் மானரிசம் ஒவ்வொரு படத்திலும் நல்ல வித்தியாசம். படத்தை ஜாலியாக ஒருமுறை பார்க்கலாம்.

Sunday, April 5, 2009

படுக்கையறை


நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு

திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை

பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோAdd Imageகேட்க வைக்கிறது
இந்த இரவு

கவிஞர் - பழநிபாரதி
புத்தகம் - புறாக்கள் மறைந்த இரவு

Friday, April 3, 2009

புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையா?

உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசையா?. அப்படியென்றால் இதனை சிறிது நேரம் படியுங்கள். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். அது விளையாட்டாக இருக்கலாம்; நெட்டில் அரட்டை அடிக்கலாம்; பூங்காவிற்கு செல்லலாம்; பிளாகில் கிறுக்கலாம் (என்னை மாதிரி); சினிமாவிற்கு செல்லலாம்; இப்படி நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் புத்தகம் எழுத ஆரம்பிப்பது. ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் உங்களுக்கு கொஞ்சம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் புத்தகம் எழுத ஆரம்பிக்காதீர்கள்.

எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதமாவது ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் மிக்க நலம். சரி மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் இருந்தால் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நிச்சயம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். உதாரணமாக சிலருக்கு காதல் காதல் கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு தன்னம்பிக்கை கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சிலருக்கு அன்றாட வாழ்க்கையின் மற்றும் மனிதர்களின் நிஜங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். இவை சில உதாரணங்கள் தான். இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தினமும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்வீர்கள். ரயிலில் பயணம் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய பேரை காணக் கூடும். அவர்களின் செயல்கள் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பல எளிமையான மனிதர்களை பார்த்திருப்பீர்கள். நான் பேருந்தில் பயணம் என்று சொல்வது சென்னையில் பயணம் செய்வதை அல்ல. சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் செய்வதைத்தான் சொல்கிறேன். சென்னையில் நான் தினமும் பயணம் செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கற்பனையும் வரவில்லை. அதற்கு சில அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.


சரி. இப்போது நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊர் போய் சேர குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். இதில் முக்கியமான ஒன்று நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்வது அவசியம். அப்போதுதான் வெளி உலகை ரசிக்க முடியும். உலகத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். காணும் மனிதர்களின் உள்ளங்களைக் களவாட முடியும். அவர்களின் மனதில் வழிந்தோடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். பாடும் பறவைகளின் ஓசையை ரசிக்க முடியும். கூவும் குயில்களின் கூரிய இசையை சந்திக்க நேரிடும். சாலையோரத்தில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களின் நிஜ வாழ்க்கையின் நிஜத்தினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதில் உள்ள சந்தோஷங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் என பலவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயல்வீர்கள். நானும் நிறைய முறை மாடு மேய்த்து இருக்கிறேன். இப்போது வீட்டுக்கு சென்றாலும் நான் மாடு மேய்ப்பேன்.

நான் பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஆடுமாடுகள் மேய்க்கும் சிறுவர் சிறுமிகளை பார்த்திருக்கிறேன். அவர்களை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அதே சமயம் அதே அளவு வருத்தமும் இருக்கும். அவர்கள் மகிச்சியாக இருக்கிறார்களா. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்; அவர்களின் ஆசைகளை எப்படி அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள் என இப்படி பல வருத்தங்கள் எனக்குள் இருக்கும். அவர்களின் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை அவர்களின் வாயிலாக கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. நான் நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இன்னும் மனிதர்களின் உள்ளங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிறைய மனிதர்களை சந்தியுங்கள். நகரத்து மனிதர்களை அல்ல; கிராமத்து மனிதர்களை. எளிமையான மனிதர்களை. குக்கிராமங்களுக்கு பயணம் செல்லுங்கள். அங்கு வாழும் எளிமையான, உண்மையான, கருப்பு உருவத்தில் இருக்கும் வெள்ளை மனிதர்களை, குடிக்க நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுக்கும் சங்க காலத்து விருந்தோம்பல் மிக்க மனிதர்களிடம் பேசிப் பழகுங்கள். பிறகு நீங்களே எழுத வேண்டாம் என்று நினைத்தால் கூட உங்களால் எழுதாமல் இருக்க முடியாது.

சரி. முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக எழுத ஆரம்பிக்கலாம். ஒரே அடியாக பெரிய புத்தகமாக எழுத நினைக்காதீர்கள். முதலில் ஒரு ஐந்து பக்கம் அல்லது பக்கம் கொண்ட சின்ன கட்டுரை எழுதிப் பழகலாம். நீங்கள் எழுதியதை மற்றவர்களிடம் காட்டி கருத்துகள் கேட்கலாம். அவருக்கும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். சிலர் உங்கள் முயற்சியை கேலி செய்யலாம். அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்; அவர்களை அலட்சியப்படுத்திவிடுங்கள். நீங்கள் எழுதியதை பத்திரிகை எழுத்தாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம். அவர்களின் உதவியை நாடலாம். நீங்கள் நல்ல சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்று நினைத்தால் நிறைய புத்தகங்களைப் படியுங்கள். நான் கூறியது உங்களுக்கு சிறிதளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

பின்குறிப்பு:

கவிப்பேரரசு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படியுங்கள். மிகச் சிறந்த நூல். விலை அதிகமில்லை. நூற்று பத்து ரூபாய்தான்.

Thursday, April 2, 2009

உங்கள் ஒட்டு கேப்டன் விஜயகாந்திற்கு!


நான் ஏற்கனவே சொன்னது போல விஜயகாந்த் இந்த தேர்தலில் தனித்தே களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வேறு யாராவது இந்த தேர்தலில் தனித்து நிற்கிறார்களா?. இல்லை. ஏன்?. ஏனென்றால் அவர்களுக்கு பயம். தனியாக நின்றால் தோற்றுவிடுவோமோ என்ற பயம். இத்தனை வருடங்கள் திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தார்களே, இன்னும் ஏன் அவர்களுக்கு தனியாக நிற்க தைரியம் வரவில்லை. அவர்களுக்கே தெரியும் அவர்கள் மக்களாட்சி செய்யவில்லை என்று.

கருணாநிதி மக்களாட்சி என்பதை தன் மக்களுக்கு (குடும்பம்) செய்ய வேண்டிய ஆட்சி என்று நினைத்து விட்டார். அதனால் தான் இன்று பல கோடிகளுக்கு அதிபராகி விட்டார். முதல்வன் படத்தில் வருவது போல கருணாநிதி அரசியலில் நுழையும் பொது எவ்வளவு ரூபாய் வைத்து இருந்திருப்பார். மிஞ்சிப்போனால் ஒரு லட்சம் ரூபாய் வைத்து இருந்திருப்பாரா? (இதுவே அதிகம் என்று நினைக்கிறேன்.). ஆனால் இன்று எத்தனை கோடிகள் வைத்திருப்பார். ஒரு பத்தாயிரம் கோடிகள். இல்லை மேலும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். கருணாநிதி எவ்வளவு பணம் வைத்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. ஏனென்றால் தினமும் அவர் கஜானாவில் கோடிக்கணக்கில் பணம் ஏறிக்கொண்டேயிருக்கும். எல்லாம் மக்களின் வரிப்பணம். அரசாங்கமே அவர் கையில் இருக்கிறதல்லவா. அரசாங்கத்தை அவர் கையில் கொடுத்தது மக்கள் தானே. அதற்கான பலன் தான் இது. நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறது?. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு. (For every action, there is an equal and opposite reaction) அதைத்தான் இன்று தமிழக மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது ஜெயலலிதா (இவரை அம்மா என்று அதிமுகவினர் அன்போடு அழைப்பார்களாம்.என்ன கொடுமை சரவணன் இது). யாரை அம்மா என்று சொல்ல வேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் தனியாக பாடம் எடுக்க வேண்டும். அவர் மேல் எத்தனை ஊழல் வழக்குகள். என்னால் என்ன முடியவில்லை. ஆனால் எனக்கு ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். ஆணாதிக்கம் மிக்க அரசியலில் தன்னாலும் கொள்ளையடிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார். எவ்வளவு வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன், நான் கொள்ளையடித்து கொண்டே இருப்பேன் என்ற அந்த தைரியம் தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது.


அடுத்தது நம் ராமதாஸ் (இவரை கொய்யா ஸாரி அய்யா என்று கூப்பிடுவார்கள்). நம் விஜயகாந்த் சொன்னது மாதிரி இவர் ஐந்து வருடம் வேஷ்டியைத் துவைப்பார். இன்னொரு ஐந்து வருடம் சேலையைத் துவைப்பார். போன ஜென்மத்தில் டோபியாக (மற்றவர்களின் துணிகளைத் துவைப்பவர்கள்) பிறந்திருப்பார் என்று நினைக்கிறேன். (டோபிகளை தவறாக நினைக்கிறேன் என்று யாரும் என்னை நினைக்க வேண்டாம். அவர்களின் மேல் எனக்கு மிகுந்த அன்பு உள்ளது). இவர் கடைசி நிமிடம் வரைக்கும் காங்கிரஸில் இருந்து விட்டு (மகன் அன்புமணியின் பதவிக்காக மற்றும் மக்கள் டிவியின் அரசாங்க விளம்பிரத்திற்கு) பதவிக்காலம் முடிய இரண்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு சகோதரி (ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தத்து எடுத்து விடுகிறார்) ஜெயலலிதாவின் சேலையைத் துவைக்க கிளம்பி விட்டார். இவருக்கு இதெல்லாம் ஒரு பொழப்பு. இதுக்கு பேசாம ....... கட்.கட்..வேண்டாம்... அதற்கு மேல் என் வாயில் நல்ல வார்த்தைகள் இல்லை.


அடுத்தது கேப்டன். விஜயகாந்தை விஜயகாந்த் என்று சொல்வதை விட அவரை கேப்டன் என்று சொல்வதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு அந்த பெயர் மிக பொருத்தமாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அவர் நடிகனாக ஆரம்பித்து, அவர் பின்னாடி இன்று இவ்வளவு லட்சக்கணக்கான ரசிகர்கள் சேர்ந்தது வரை அவருடைய உழைப்பு எவ்வளவு இருந்திருக்கும். அவர் இருக்கும் உருவத்திற்கு அவர் நடிகனாக நுழைந்ததே பெரிய விஷயம். இன்று வரை நீடித்து நிற்பது அதை விட பெரிய விஷயம். லட்சக்கணக்கான ரசிகர்களை இவ்வளவு கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் அவரை கேப்டன் என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

நின்ற முதல் சட்டசபைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் பதினைந்தாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். எப்படி?. மக்கள் அவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள். அவர் மக்கள் மீது நம்பிக்கை வைத்தார். அதனால் தான் இன்று வரை தனித்தே நிற்கிறார். அவர் நினைத்திருந்தால் பல கோடிகளைப் பெட்டியில் வாங்கிக் கொண்டு போயிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தார். இவ்வளவு காலம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்டோம். ஒரு மயிரும் நடக்கவில்லை. ஒரு தடவை கேப்டன் விஜயகாந்திற்கு போடுவோம். என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.


பின்குறிப்பு:

யார் மனதாவது புண்படும்படி எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும் (ஹி.ஹி. ஹி.).

Friday, March 27, 2009

விபத்தில் பலியான ஆசிரியருக்கு சேரன் நடத்திய அஞ்சலி!


விபத்தில் பலியான் தன் முன்னாள் ஆசிரியருக்கு இயக்குநர் சேரன் அஞ்சலிக் கூட்டம் நடத்தினார்.

சேரனுக்கு சிறு வயதில் ஆசிரியராக இருந்தவர் கே. சுவாமிநாதன் (வயது 58). சேரன் படித்த மதுரை அருகே உள்ள மேலூரை அடுத்த ஒக்குப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் மீது சேரனுக்கு அதிக அன்பும் மரியாதையும் உண்டு. காரணம் சேரனுக்கு பல நிலைகளிலும் பக்க பலமாக இருந்தவர் சுவாமிநாதன்.

சமீபத்தில் ஆசிரியர் சுவாமிநாதன் வாகன விபத்தில் பலியானார். அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்தனர். கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இருதய வால்வு போன்றவை 6 பேருக்கு பொருத்தப்பட்டன.

இதையடுத்து சுவாமிநாதனுக்கு அஞ்சலி மற்றும் பாராட்டு கூட்டத்தை சேரன் ஏற்பாடு செய்து நடத்தினார். சென்னையில் இருந்து நடிகர்களை அழைத்துச் சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த விழாவில் சேரன் பேசியது:

என்னை போல் பல பிரபலங்களை உருவாக்கியவர் ஆசிரியர் சுவாமிநாதன். பொதுவாக பிரபலங்கள்தான் வெளியில் தெரிவார்கள். ஆனால் அவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் கடைசிவரை வெளியே தெரிவதில்லை. எனக்கு சோதனை வந்த போதெல்லாம் அறிவுரை கூறி பக்கபலமாக இருந்தவர் என் ஆசிரியர்தான்.

வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம், எச்சரிக்கை அவசியம். நம்மை நம்பி நமது குடும்பத்தினர் உள்ளனர் என்பதை நினைத்து அனைவரும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து உறுதி எடுக்கவேண்டும் என்றார் சேரன் கண்ணீருடன்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், குழந்தைகளை நல்ல மனிதர்களாகவும், நல்ல தலைவர்களாகவும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் பணி தூய்மையானது. ஒரு மனிதனை பெயர் சொல்லி அழைத்தவர்கள் அவர் இறந்து விட்டால் பாடியை எப்போது எடுப்பார்கள் என்று கேட்கிறார்கள்.

இப்படி வீணாக போகும் உடலை தானம் செய்வதால் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம். ஆசிரியர் சுவாமிநாதன் உடல் தானம் செய்ததன் மூலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரது பெயரில் அறக்கட்டளை அமைத்து அவரது குடும்பத்தினரும், டைரக்டர் சேரனும் தமிழ்நாடு முழுவதும் உடல்தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நன்றி - தட்ஸ்தமிழ்

Sunday, March 22, 2009

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றம்



மக்களவை தேர்தல் நடப்பதால் ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசுகள் மறுத்துவிட்டன. இதனால் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில்லை என ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா அல்லது இங்கிலாந்தில் போட்டிகள் நடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட அமைப்பு ஐபிஎல். இந்த அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய போட்டிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 தொடங்கி மே 13 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடந்ததால் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு கூறியது. அட்டவணையை மாற்றியமைக்கும் படி கேட்டுக்கொண்டது.

இதையடுத்து சில மாறுதல்களுடன் புதிய அட்டவணையை மத்திய அரசுக்கு அனுப்பியது ஐபிஎல் நிர்வாகம். ஆனால் அதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மீண்டும் இரண்டு முறை அட்டவணையை மாற்றி கொடுத்தது ஐபிஎல். அதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களவை தேர்தலை நடத்துவதே எங்களுக்கு முக்கியம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் இன்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பிசிசிதலைவர் ஷாசங் மனோகர் கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படமாட்டாது.தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டுக்கு இந்த போட்டிகள் மாற்றப்படுகிறது. தென் ஆப்ரிக்கா அல்லது இங்கிலாந்தில் போட்டிகள் நடக்கலாம். இதனால் இந்திய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம். மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியதால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இந்திய மக்கள் போட்டிகளை பார்க்கும் வசதியாக இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அனைத்து போட்டிகளும் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.