Monday, July 19, 2010

கருணாநிதியின் கொள்கை!

கலைஞர் கருணாநிதியின் டாப் டென்:


1 .பிடித்தது: தம் மக்கள்
2 .பிடிக்காதது: தமிழக மக்கள்
3 .கனவில் வருபவர்: எதிர்க்(எதிரிக்)கட்சி தலைவர் ஜெயலலிதா
4 .பிடித்த பொருள்: பேனா
5 .கொள்கை: பகுத்தறிவு (பிறருக்கு மட்டும்)
6 .சாதனை: அனைத்திலும் இலவசம், குடும்பம் முழுவதையும் ஆட்சியில் அமர வைத்தது
7 .தொழில்: தினசரி அறிக்கை விடுவது, அடிக்கடி விழா நடத்தி தன்னைப் பற்றி துதிபாட வைப்பது
8 .உபதொழில்: சினிமாவிற்கு திரைக்கதை, வசனம் எழுதுவது
9 .பிடித்த நாடு: தமிழ்நாடு
10 .பிடிக்காத நாடு: என்றுமே குடைச்சல் தரும் இலங்கை

Saturday, July 17, 2010

என்னை எழுத தூண்டியது...

நான் ப்ளாக் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது எழுத வேண்டிய கட்டாயம். சென்னையில் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. ஏற்கனவே பலமுறை இம்மாதிரியான சம்பவங்களை பார்த்திருந்த போதிலும் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை வலைப்பதிவில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. சரி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு மாலைப்பொழுது. நேரம் சுமார் 6.30 pm இருக்கும். திநகர் சரவணா ஸ்டோர்ஸ் -இல் துணிமணிகள் எடுத்துக் கொண்டு வேளச்சேரியில் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்ல திநகர் பேருந்து நிலையத்தில் 5A பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது பேருந்து நிலையத்தின் ஓரத்தில் சுமார் 80 வயதான பாட்டி ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். மிகவும் தளர்ந்த தேகம். சுருங்கிவிட்ட தோள்கள். ஒடுங்கிவிட்ட கண்கள். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒட்டிய வயிறு. எந்த ஒரு மனிதனுக்கும் அந்த காட்சியைப் பார்த்தால் கண்ணீர் வரும். எனக்கும் வந்தது. நான் மனிதன். ஒரு சிலர் அந்த பாட்டி வைத்திருந்த தட்டில் ஒன்று இரண்டு என்று போட்டு சென்றனர். நான் என் பையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த பாட்டியின் கையில் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் யோசித்து பார்த்தேன். அந்த பத்து ரூபாயை வைத்து அந்த பாட்டி ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது என்று நினைத்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அந்த பாட்டியின் கையில் வைத்துவிட்டு வந்தேன்.


5A பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டேன். பேருந்து திரும்பும்வரை அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே சென்றேன். மனதில் எண்ண அலைகள் வந்து போய்க்கொண்டிருந்தன. அந்த பாட்டியைப் போல எத்தனை பேர் அனாதைகளாக சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். கடைசி காலத்தில் தான் பெற்ற மகன் தன்னைக் காப்பாற்றுவான் என்று எண்ணியிருந்த அந்த தாயின் எண்ணங்களே அந்த மகனுக்கு பெருஞ்சாபமாக மாறாதா? தன்னுடைய கடைசிகாலத்தில் தன் மகன் தன்னையும் அனாதையாக விடக்கூடும் என்று யோசிக்க தெரியாதா?அனாதையாக விடப்பட்ட அந்த தாயின் கண்ணீர், பிற்காலத்தில் அந்த மகனின் கண்களில் ரத்தக்கண்ணீராய் வெளிப்படக்கூடும். திநகர் பேருந்து நிலையத்தில் பார்த்த பாட்டியிடம் என் தாயைப் பார்த்தேன். அனாதைகளாக விடப்பட்ட ஒவ்வொரு முதியவர்களிடமும் என் ரத்த சொந்தங்களைப் பார்க்கிறேன். என்னுடைய இந்த எண்ணங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ஒத்துப்போகும் என்று நினைக்கின்றேன்.

சமீபத்தில் இப்படி அனாதைகளாக விடப்பட்ட வயதான ஒருவரின் புகாரின்பேரில் அவருடைய மகனைக் கைது செய்தது சென்னை மாநகராட்சி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இதனால் அந்த மகன் உண்மையிலேயே தன் தவறை உணர்வானா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பள்ளிபருவத்திலேயே பிள்ளைகளிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. சான்றோர்களை மதித்தல்; பெற்றோர்களிடம் தினமும் ஆசிபெறுதல்; தாய்நாட்டை நேசித்தல் போன்ற உயர்ந்த பண்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பிற்காலத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக வருவார்கள். இதற்கான பொறுப்பு அரசிடமும், ஆசிரியர்களிடமும் உள்ளது.ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய மனசாட்சியின்படி நடந்துகொண்டால் அநாதைகளே இல்லாத இந்தியா மிக விரைவில் மலரும் என்பது திண்ணம்.

Sunday, March 7, 2010

உன்னைக் கைவிடமாட்டேன் - ஒரு பக்க கதை..



அன்று சிறுவர்கள் அந்த அழகிய கிராமத்துத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். திருடன் போலீஸ் விளையாட்டு. அதாவது ஒருவன் தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் எங்காவது சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். ஒளிந்து கொண்டவர்களைக் கண்ணைமூடிக்கொள்பவன் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் விளையாட்டு. கண்ணை மூடிக் கொள்பவன் போலீஸ். நம்ம ஊரில் நடப்பது போல. ஆனால் நம்ம போலீஸ் கொஞ்சம் திறமைசாலி. ஹீரோவாச்சே. ஓடி உஷாராக ஒளிந்து கொள்பவர்கள் திருடர்கள். இப்போது நம்ம ஹீரோ கண்ணை திறந்து கொள்கிறான். எதிரில் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு நாதியில்லை.

நீண்ட நேரம் அலைந்து தேடியும் எந்த திருடனையும் பிடிக்க முடியவில்லை நம்ம ஹீரோவால். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏதோ ஒரு உருவத்தின் நிழல் அசைவதைக் கண்டான். அவன் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. திருடன் அகப்பட்டுவிட்டான் என்ற சந்தோஷத்தில் அந்த வீட்டை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடி அந்த வீட்டின் வாசலை அடைந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன்னுடைய பென்சில் பாக்ஸ்-ஐ எடுப்பதற்காக ஒரு நாற்காலியில் ஏறி தேடிக்கொண்டிருந்தாள். நம்ம ஹீரோ வந்த அதிர்ச்சியில் அந்த சிறுமி பயந்து நாற்காலியில் இருந்து தவறி விழப்போனாள். விழப்போன அந்த சிறுமியை நம்ம ஹீரோ தாங்கிக் கொள்கிறான்.


கொஞ்ச நேரம் நம்ம ஹீரோ அந்த சிறுமியை தன் கைகளில் தாங்கியபடியே அவளுடைய அழகிய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னை இறக்கி விடும்படி கூறுகிறாள். ஹீரோவும் அவளை இறக்கி விடுகிறான். அவளின் பெயர் என்னவென்று கேட்கிறான். தமிழரசி என்கிறாள். அவளின் பெயர் அவளைப் போலவே அழகாக இருப்பதாக கூறுகிறான். அவள் சிறிதாக புன்னகைக்கிறாள். அவனுடைய பெயர் என்னவென்று கேட்கிறாள். தமிழரசன் என்கிறான். அவள் சிரிக்கிறாள். சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். நம்ம ஹீரோவுக்கு நேரம் ஆகிவிட்டது. ஏதாவது ஒரு திருடனைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவளிடம் இருந்து விடைபெற்று கொள்கிறான்.


சிறிது நேரத்தில் ஒரு திருடனைக் கண்டுபிடித்து விடுகிறான். ஆட்டம் முடிகிறது. மறுபடியும் புது ஆட்டம். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட திருடன்தான் போலீஸ். அவன் மற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸ் கண்ணை மூடிக் கொள்கிறான். மற்றவர்கள் ஓடி மறைந்து கொள்கிறார்கள். நம்ம ஹீரோ ஹீரோயின் வீட்டை நோக்கி ஓடுகிறான். வாசலில் நின்று கொண்டிருந்த நம்ம ஹீரோயின் அவன் வருவதைக் கண்டு நாற்காலியில் ஏறிக் கொள்கிறாள். ஹீரோ வீட்டில் நுழைந்தவுடன் அவள் நாற்காலியில் இருந்து தவறி விழுகிறாள். நம்ம ஹீரோ அவளைத் தாங்கிக் கொள்கிறான். அவளுக்குத் தெரியும் தன் தலைவன் தன்னைத் தாங்கிக் கொள்வான் என்று...

Saturday, March 6, 2010

புத்தகம் எழுதுவது எப்படி?

உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசையா?. அப்படியென்றால் இதனை சிறிது நேரம் படியுங்கள். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். அது விளையாட்டாக இருக்கலாம்; நெட்டில் அரட்டை அடிக்கலாம்; பூங்காவிற்கு செல்லலாம்; பிளாகில் கிறுக்கலாம் (என்னை மாதிரி); சினிமாவிற்கு செல்லலாம்; இப்படி நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் புத்தகம் எழுத ஆரம்பிப்பது. ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் உங்களுக்கு கொஞ்சம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் புத்தகம் எழுத ஆரம்பிக்காதீர்கள்.

எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதமாவது ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் மிக்க நலம். சரி மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் இருந்தால் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நிச்சயம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். உதாரணமாக சிலருக்கு காதல் காதல் கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு தன்னம்பிக்கை கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சிலருக்கு அன்றாட வாழ்க்கையின் மற்றும் மனிதர்களின் நிஜங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். இவை சில உதாரணங்கள் தான். இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தினமும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்வீர்கள். ரயிலில் பயணம் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய பேரை காணக் கூடும். அவர்களின் செயல்கள் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பல எளிமையான மனிதர்களை பார்த்திருப்பீர்கள். நான் பேருந்தில் பயணம் என்று சொல்வது சென்னையில் பயணம் செய்வதை அல்ல. சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் செய்வதைத்தான் சொல்கிறேன். சென்னையில் நான் தினமும் பயணம் செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கற்பனையும் வரவில்லை. அதற்கு சில அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.


சரி. இப்போது நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊர் போய் சேர குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். இதில் முக்கியமான ஒன்று நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்வது அவசியம். அப்போதுதான் வெளி உலகை ரசிக்க முடியும். உலகத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். காணும் மனிதர்களின் உள்ளங்களைக் களவாட முடியும். அவர்களின் மனதில் வழிந்தோடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். பாடும் பறவைகளின் ஓசையை ரசிக்க முடியும். கூவும் குயில்களின் கூரிய இசையை சந்திக்க நேரிடும். சாலையோரத்தில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களின் நிஜ வாழ்க்கையின் நிஜத்தினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதில் உள்ள சந்தோஷங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் என பலவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயல்வீர்கள். நானும் நிறைய முறை மாடு மேய்த்து இருக்கிறேன். இப்போது வீட்டுக்கு சென்றாலும் நான் மாடு மேய்ப்பேன்.

நான் பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஆடுமாடுகள் மேய்க்கும் சிறுவர் சிறுமிகளை பார்த்திருக்கிறேன். அவர்களை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அதே சமயம் அதே அளவு வருத்தமும் இருக்கும். அவர்கள் மகிச்சியாக இருக்கிறார்களா. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்; அவர்களின் ஆசைகளை எப்படி அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள் என இப்படி பல வருத்தங்கள் எனக்குள் இருக்கும். அவர்களின் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை அவர்களின் வாயிலாக கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. நான் நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இன்னும் மனிதர்களின் உள்ளங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிறைய மனிதர்களை சந்தியுங்கள். நகரத்து மனிதர்களை அல்ல; கிராமத்து மனிதர்களை. எளிமையான மனிதர்களை. குக்கிராமங்களுக்கு பயணம் செல்லுங்கள். அங்கு வாழும் எளிமையான, உண்மையான, கருப்பு உருவத்தில் இருக்கும் வெள்ளை மனிதர்களை, குடிக்க நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுக்கும் சங்க காலத்து விருந்தோம்பல் மிக்க மனிதர்களிடம் பேசிப் பழகுங்கள். பிறகு நீங்களே எழுத வேண்டாம் என்று நினைத்தால் கூட உங்களால் எழுதாமல் இருக்க முடியாது.

சரி. முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக எழுத ஆரம்பிக்கலாம். ஒரே அடியாக பெரிய புத்தகமாக எழுத நினைக்காதீர்கள். முதலில் ஒரு ஐந்து பக்கம் அல்லது பக்கம் கொண்ட சின்ன கட்டுரை எழுதிப் பழகலாம். நீங்கள் எழுதியதை மற்றவர்களிடம் காட்டி கருத்துகள் கேட்கலாம். அவருக்கும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். சிலர் உங்கள் முயற்சியை கேலி செய்யலாம். அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்; அவர்களை அலட்சியப்படுத்திவிடுங்கள். நீங்கள் எழுதியதை பத்திரிகை எழுத்தாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம். அவர்களின் உதவியை நாடலாம். நீங்கள் நல்ல சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்று நினைத்தால் நிறைய புத்தகங்களைப் படியுங்கள். நான் கூறியது உங்களுக்கு சிறிதளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

பின்குறிப்பு:

கவிப்பேரரசு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படியுங்கள். மிகச் சிறந்த நூல். விலை அதிகமில்லை. நூற்று பத்து ரூபாய்தான்.

Friday, March 5, 2010

மனிதனை மனிதனாய்ப் பாருங்கள்...


சாமியார்கள் என்றாலே சந்தி சிரிக்கிறது. சாமியார்கள் என்றாலே காமியார்கள் என்றாகிவிட்ட பிறகு வேறென்னே சொல்ல?. சுவாமி (?!) நித்யானந்தரின் காமலீலைகள் நமக்கு அதைத்தான் காட்டுகின்றன. இந்திய மக்களுக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ இது புதிய பிரச்சனை அல்ல. அநேகமாக நாள்தோறும் போலி சாமியார்களைப் பற்றிய வேண்டதகாத செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் நம் மக்களின் மனநிலை மாறுவதாக இல்லை. படிக்காத பாமர மக்களில் இருந்து படித்த பணக்காரர்கள் வரை சாமியார்களின் கால்களில் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பெரிய காமெடி என்னவென்றால் நம் தமிழக அரசியல்வாதிகளே சாமியார்களின் புகழைப் பாடுவதுதான். இந்த சாமியார் எனக்கு தன் மந்திர சக்தியால் மோதிரம் தந்தார்? செயினை தந்தார்? என்று பகுத்தறிவு இயக்கமான திமுக அமைச்சர்கள் காமெடி அடிக்கிறார்கள். பிரேம்ஜி ஸ்டைலில் சொல்வதென்றால் என்ன கொடுமை சார்.



சாமியார்கள் ஆகிவிட்டாலே அவர்களைப் பணக்காரர்களாக மாற்றிவிடுவது நமது மண்ணின் பெருமை போல. நம் நாட்டில் உள்ள சாமியார்களில் 99 சதவீத சாமியார்கள் காமியார்களாகத்தான் இருக்கிறார்கள். மீதி இருக்கிற ஒரு சதவீத சாமியார்கள் (சந்நியாசிகள்) நமக்கு தெரியாதவர்களாக இருக்கின்றனர். அதுதான் பிரச்சினை. தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொள்ளாமலிருப்பதும்; தெரிந்து கொள்ள கூடாததை தெரிந்து கொள்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஆதி காலம் முதலே நமக்கு விளங்காத விஷயமாகிவிட்டது. கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது மனிதன் கடவுளைப் படைத்தானா?. இதற்கும் பதில் இல்லை. ஆத்திகர்கள் கடவுள் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். நல்லது. இருந்து கொள்ளட்டும். அப்படி இருக்கையில் அவர்கள் அந்த கண்ணுக்கு தெரியாத கடவுளை கும்பிடட்டும். ஏன் கண்ணுக்கு தெரிகிற சா(கா)மியார்களை கும்பிடுகின்றனர். நாத்திகர்கள் இந்த வகையில் மிகவும் போற்றத்தக்கவர்கள். கண்ணுக்கு தெரியாதவற்றை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

சுவாமி விவேகனந்தர் கூட இதையே சொல்கிறார். மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடக்கும் நாட்டிற்கு ஆத்திகத்தைவிட நாத்திகமே மேல் என்று?. இன்று நம் நாட்டில் சாமியார்கள் என்றாலே ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். கடவுள் என்ற ஒன்றே மனிதன் தன் மனசாட்சிக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பதற்கு படைக்கப்பட்ட ஒரு பொருள் என்று நிறைய நூல்களில் படித்திருக்கிறேன். அது உண்மைதான் என்பது என் கருத்து. இல்லையென்றால் இவ்வளவு கூத்து நடந்த பின்பும் அந்த கடவுள் வானத்தில் இருந்து இறங்கி வரவில்லை என்றால் அப்புறம் என்ன அவர் கடவுள்?.


மனிதனை மனிதனாய்ப் பாருங்கள். கடவுளாக அல்ல. பிறகு நீங்களே உங்களைக் கடவுளாக உணர்வீர்கள். எப்போதும்...ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் தோன்றுமானால் இந்த பூமி உருவம் உள்ள கடவுள்களின் பூந்தொட்டியாய் மாறும். நன்றி...