Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Tuesday, April 7, 2009

வடகொரியா ஏவுகணை சோதனையும், இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்!

சில நாட்களுக்கு முன்பு வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பின. முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து. வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது சரியா? அல்லது தவறா? என்று பல பகுதிகளில் இருந்தும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதைப் பற்றி கீழே சற்று அலசுவோம்.
எந்த ஒரு நாடும் அதிநவீன போர் உபாயங்களை சோதனை செய்தால் அதற்கு முதலில் எங்கிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது என்று பார்த்தால் அது அமெரிக்காவில் இருந்துதான். காரணம் ராணுவத்தில் தான்தான் பெரிய ஆளாக (தாதா) இருக்க வேண்டும் என்ற மனோபாவம். வடகொரியா தற்போது சோதித்துள்ள ஏவுகணை 7600 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையாம். அதாவது அமெரிக்காவின் அலாஸ்கா நகரத்தைக் கூட இந்த ஏவுகணையால் தாக்க முடியுமாம். ஆனால் இந்த சோதனை சில வினாடிகளிலேயே தோல்வி அடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது. வடகொரியாவிற்கு நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தக்கூடிய திறன் இல்லை என்றும் அமெரிக்க கூறுகிறது. அவ்வாறு செலுத்துவது மிகவும் கடினமான காரியம் என்றும் இன்னும் பத்து வருடத்திற்கு வடகொரியாவால் அத்தகைய ஏவுகணையை வெற்றிகரமாக சோதிக்க முடியாது என்றும் அமெரிக்க கூறியுள்ளது. வடகொரியா ஏற்கனவே நிறைய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஆனால் நிறைய சோதனை தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருந்தாலும் அவற்றை ராணுவத்தில் சேர்த்துள்ளது. போர் சமயத்தில் அத்தகைய ஏவுகணையை செலுத்தினால் அது தவறாக வேறு பகுதியில் விழுந்து அது நிறைய மக்கள் மடிவதற்கு காரணமாக இருக்கும்.

சரி முக்கியமான விஷயத்திற்கு வருவோம். ஏன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் அமெரிக்காவிற்கு கோபம் வருகிறது. அமெரிக்கா மட்டும் மற்ற நாடுகளைத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்யலாம். அமெரிக்காவிடம் 10000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் பல உள்ளன. மற்ற நாடுகள் அணுகுண்டு சோதனை செய்தால் அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அமெரிக்கா தன்னிடம் மட்டும் 10000 - க்கும் அதிகமான அணுகுண்டுகளை வைத்துள்ளன. இதை அனைத்து நாடுகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக இந்தியா அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் இந்த பெரிய அண்ணன் கொள்கையை மற்ற மற்ற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதில் சீனாவின் கொள்கையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். எனக்குத் தெரிந்து அமெரிக்காவை தைரியமாக எதிர்க்கக் கூடிய நாடு எது என்றால் அது சீனாவாகத்தான் இருக்க முடியும். அந்த தைரியம் மற்ற நாடுகளுக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இந்த விஷயத்தில் சீனாவை முழுமையாக பின்பற்ற வேண்டும். அமெரிக்கா எது சொன்னாலும் தலையாட்டும் மனோபாவத்தை இந்தியா விடவேண்டும். இந்தியாவால் எந்த ஒரு விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக் கூடிய தைரியம் வரவேண்டும்.

வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது மிகச்சரியே. எந்த ஒரு நாட்டுக்கும் தன்னைக் காத்துக் கொள்ள கூடிய சக்தி இருக்க வேண்டும். அது அமெரிக்காவிடம் மட்டும் இருக்க வேண்டிய விஷயமல்ல. இதற்காக அமெரிக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டா செய்ய முடியும். வடிவேலு பாஷையில் சொன்னால் இது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. இறையாண்மையை எந்த ஒரு நாடும் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அந்த நாடு அழிவின் பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். இந்தியா இந்த விஷயத்தில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.